states

img

மத்திய பிரதேசம்: இந்தூர் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து- 7 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இந்தூரில் உள்ள  விஜய் நகர் பகுதியில் ஸ்வார்ன் பாக் காலனியில் உள்ள 3 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.  அப்போது கட்டிடத்தில் சுமார் 16 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டடத்தின் தரைத்தளத்திலும், படிக்கட்டுகளிலும் உள்ள பிரதான கதவைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் தீ மற்றும் கரும் புகையால் சூழப்பட்டது. அதே நேரத்தில் 3 ஆவது மாடியிலிருந்து மேல் தளத்துக்குச் செல்லும் கதவு மிகவும் அனல் அடித்ததால், பெரும்பாலானோர் கட்டடத்திற்குள் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. 
சிலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தங்கள் குடியிருப்புகளின் பால்கனிக்கு விரைந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தீயை அணைப்பதற்கு கட்டடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனத் தெரிய வந்தது.  மின்சார மீட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 
இதையடுத்து ​​கட்டடத்தின் உரிமையாளர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 304 கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
இதுகுறித்து காவல் ஆணையாளர் ஹரி நாராயண் சாரி மிஸ்ரா கூறுகையில், 
இந்தூரில் இன்று அதிகாலை திடீரென இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கட்டடத்தில் பல குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ள கட்டடத்தில் நடந்த தீ விபத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்றார்.